பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, போலீசார் குவிக்கப் பட்டு உள்ளனர். கலவர சம்பவங்களில் ஈடுபடக்கூடிய கும்பல்களை கைது செய்து, தடுப்பு காவல் சட்டப்படி, "உள்ளே' தள்ள, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இருப்பினும், நேற்று முன்தினம், இரவில் இருந்து, வட மாவட்டங்களில், அரசு பஸ்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதால், பதற்றமான சூழல் உருவானது. இதை மேலும் வளரவிடாமல் தவிர்க்க, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பின்னணி :
மரக்காணம் கலவர சம்பவத்தில், வி.சி., கட்சியினர் மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுத்த விதத்தை கண்டித்து, நேற்று முன்தினம், விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் மற்றும் சில கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கலவரம் ஏற்படாமல் தடுக்க, விழுப்புரம் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், இரவு முதல், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஆங்காங்கே கலவரம் நடந்தது.
போக்குவரத்து பாதிப்பு
அரசு பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள், நேற்று முழுவதும் தொடர்ந்து நடந்தன. தர்மபுரி மாவட்டத்தில், இரண்டு தனியார் பஸ்களும் தாக்கப்பட்டன. இந்த சம்பவங்களில், ஒரு பஸ் ஓட்டுனர் உட்பட பல பயணிகள் காயமடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சில இடங்களில், உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களோடு சில கும்பல்கள், பஸ்களை மறித்து அடித்து நொறுக்கினர். மேலும் சில இடங்களில், இந்த கும்பல்கள், பஸ்களின் மீது பெட்ரோல் குண்டு வீசி, பஸ்களை எரித்தனர்.
கலவரத்தால், கடந்த இரண்டு நாட்களாக, மொத்தம், 193 அரசு பஸ்கள் சேதமடைந்து உள்ளன. இதில், போக்குவரத்துக் கழகங்களுக்கு, 70 லட்சம் ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஏழு பஸ்கள் தீக்கிரையாகின.இந்த பதற்றமான ‹ழலால், கிராமப்புறங்களுக்கான இரவு நேர பஸ் சேவையை, போக்குவரத்துக் கழகங்கள் ரத்து செய்தன. நேற்று ஏராளமான திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால், பஸ் போக்குவரத்து இல்லாததால், உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியாமல் நேற்று முன்தினம், இரவு முதல், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலவர கும்பல்கள், பல இடங்களில், மரங்களை வெட்டி சாய்த்து, சாலைகளை மறித்ததால், தனியார் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பிரச்னை வர வாய்ப்பு உள்ளது என, நினைத்தவர்கள், முன்னெச்சரிக்கையாக பஸ் பயணத்தை தவிர்த்து விட்டு, முன்பதிவில்லாமல் ரயில்களில் பயணம் செய்தனர்.இப்படி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இருந்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ரயில்களில், பயணிகள் அதிகளவில் வந்தனர்.
இதனால், பலர் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. அதே போல், சென்னை, கோயம்பேட்டில் இருந்து, நேற்று காலை, வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு, வழக்கத்தை விட அதிகளவில் பயணிகள் வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதர சம்பவங்கள்
* நேற்று காலை, 7:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே வாணியம்பாளையத்தில், சாலையோரம் இருந்த இரண்டு குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.நேற்று முன்தினம், இரவு, 1:00 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே வடக்கநந்தல் ஊர் நடுவே உள்ள டாஸ்மாக் கடை எண். 11455 கிரில் கேட்டின் கீழே உள்ள இடைவெளியில், சிலர் பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு சென்றனர்.
* விழுப்புரம் மாவட்டம்,கரடிசித்தூரில் டாஸ்மாக் கடை எண். 11704யில் தீ வைத்த சம்பவம் நடந்தது.
* கரடிசித்தூரில் உள்ள அரசு கிளை நூலகமும் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது
7 பிரிவுகளில் 205 பேர் கைது : காவல் துறை அதிரடி
இத்தகைய சம்பவங்களால், வடமாவட்டங்களில் இயல்பு வாழ்கை பாதிக்கப் பட்டு உள்ளது. இது தொடராமல் இருக்க, போலீசார் தீவிர கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். விழுப்புரம் போன்ற அதிக பதட்டம் நிலவிய மாவட்டங்களில், வெளிமாவட்டங்களில் இருந்து சிறப்பு படை மற்றும் ஆயுத படை போலீசார் வரவழைக்கப் பட்டனர்.
"வன்முறையை அரசு சகித்துக் கொள்ளாது; வன்முறை கும்பல்கள் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா எச்சரித்து இருந்தார். அதன்படி, வன்முறையில் ஈடுபடுவோரை கைது செய்து தடுப்பு காவல் சட்டப்படி உள்ளே தள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
போலீஸ் நடவடிக்கையால், இதுவரை,7 பிரிவுகளில், வழக்கு பதிவு செய்து, 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, சாலை மறியலில் ஈடுபட்ட, 3,500 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் எரிந்த பஸ்கள் சேதமான பஸ்கள்
சேலம் - 27
கிருஷ்ணகிரி 2 10
வேலூர் 1 50
திருவண்ணாமலை 1 11
காஞ்சிபுரம் 3 22
விழுப்புரம் - 50
கடலூர் - 19
சென்னை புறநகர் - 4
புதுச்சேரியில் நாளை பந்த்
வன்னியர் சங்கம் சார்பில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை கைது செய்யப் பட்டதை கண்டித்து, நாளை புதுச்சேரியில் பந்த் நடக்க உள்ளது.நேற்று, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நடந்த கல்வீச்சில் சம்பவங்களில்,10க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்தன. இதில், அரசு பஸ் ஓட்டுனர் ஒருவர் காயமடைந்தார்.
வாடகை கார் சேவையும் பாதிப்பு
கடந்த இரண்டு நாட்களாக நிலவும் கலவர சூழலால், சென்னையில் இருந்து சாலை வழியாக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு செல்வதற்கும், புதுச்சேரிக்கு செல்வதற்கும், "கால் டாக்சி' நிறுவனங்களால் சேவைகளை அளிக்க முடியவில்லை.
இது குறித்து, சென்னை டூரிஸ்ட் கார் ஆபரேட்டர் அசோசியேசனின் பொது செயலர், பெருமாள் கூறுகையில், ""மரக்காணம் கலவரத்தால், கடந்த இரு நாட்களாக, கிழக்கு கடற்கரை சாலையில், வாகனங்களை இயக்கவில்லை. போலீஸ் பாதுகாப்புடன்ஒரு சில வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த கலவரத்தால், "கால் டாக்சி' தொழில் பாதிக்கப் பட்டு உள்ளது,'' என்றார்.
"காவேரி டிராவல்ஸ்' நிர்வாகி, ராமன் கூறுகையில், ""விமான நிலையத்தில் இருந்து, விழுப்புரத்துக்கு இன்று (நேற்று) "டிரிப்' செல்ல வேண்டி இருந்தது. அந்த மாவட்டம் முழுவதும், பதற்றமாக இருப்பதால், "டிரிப்'பை ரத்து செயது விட்டோம்,'' என்றார்.இப்படி பல்வேறு வாடகை கார் நிறுவனங்களும் குறிப்பிட்ட ஊர்களுக்கு தங்கள் சேவையை ரத்து செய்தன.
பேருந்து ஓட்டுனர்கள் புலம்பல்
கலவரத்தில் பேருந்துகள் குறிவைக்கப் படுவதால், பேருந்து ஓட்டுனர்கள் பயத்துடனே பேருந்தை இயக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து, பேருந்து ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், ""பேருந்துகளில் செல்லும் போது, எப்போது கலவரம் ஏற்படுமோ என்ற பயத்துடனேயே, பேருந்தை இயக்கி கொண்டிருக்கிறோம். இதனால் பேருந்துகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்,'' என்றார்.
ராமதாஸ் ஜாமின் மனு இன்று விசாரணை
தான விழுப்புரம்: பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை, விழுப்புரம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை, ஜாமினில் விடக்கோரி, நேற்று முன்தினம் மாலை, வழக்கறிஞர் துரைமுருகன், விழுப்புரம் இரண்டாவது மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன், மனு தாக்கல் செய்தார். நேற்று அரசு விடுமுறை என்பதால், விசாரணை, இன்று நடக்கிறது.
நமது நிருபர் குழு
Post a Comment